இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்துவிட்டு கோட்டபாய தேர்தலில் போட்டியிட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் -
கோட்டபாய ராஜபக்ச அவர்களை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளார்கள்.
ஒரு இனம் இன்னொரு இனத்தால் படுகொலை செய்யப்பட்ட நாள் மே 18. அவ்வாறான விடயங்கள் நடந்த போது இராணுவத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த ஒருவர், அதற்கான பொறுப்புக் கூறலை முதலில் தெரியப்படுத்த வேண்டும். அங்கு வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.அதற்க்கான காரணங்களை கூறவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் குடும்ப உறுப்பினர்களுடன் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே. பாலகுமாரன், கவிஞர் புதுவை இரத்தினதுரை மற்றும் யோ.சே.யோகி போன்றவர்கள் சரணடைந்துள்ளார்கள்.
நூற்றுக்கணக்கானோர் கிறிஸ்தவ மதகுரு ஒருவருடன் சேர்ந்து சரணடைந்தார்கள். எனவே அந்த சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தியதன் பின்பு வாக்கு கேட்டு தேர்தலில் நிற்க வேண்டும் என மிக காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment